கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கலைஞர் கால்படாத இடமே இல்லை. தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலை கழகம், டைடல் பார்க், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கோவையில் நடைபெறும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. சேலம் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக ரூ.3.37 கோடி வழங்கியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக மாநாட்டு நிதியை கோவை மாவட்டம் வழங்கியுள்ளது. மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.




மாநாட்டு அழைப்பு கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக 1980 ல் இளைஞர் அணி என தனியாக அணி திமுகவில் தான் துவங்கப்பட்டது. தேர்தல் முன்பு அரசியல் இயக்கங்கள் எழுச்சியை காட்ட மாநாடுகள் நடத்துவார்கள். அதை இயக்கங்களே நேரடியாக நடத்தும் எந்த அணிக்கும் கிடைக்காது. ஆனால் நமது தலைவர் தேர்தலுக்கு முன் முதல் மாநாட்டை நடத்த இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், அது இளைஞர்கள் மீது தலைவர் வைத்துள்ள நம்பிக்கை. அதை நாம் காப்பாற்ற வேண்டும்.   மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. அது எதற்கு நடந்தது என யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும்.  


கடந்த 3 வருடங்களில் தலைவர் கொண்டு வந்த முக்கியமான நான்கு திட்டம், முதலில் கட்டணமில்லா பேருந்து, பெண் கல்வி மேம்பட புதுமை பெண் திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை உணவு திட்டத்தால் 31ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன் பெறறு வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தினால் 1.18 கோடி மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். இத்திட்டங்களை மக்கள் மத்தியில் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. அடிமை அதிமுகவினர் பாஜக வற்புறுத்தல் காரணமாக நீட்டை தமிழகத்தில் நுழைய விட்டனர். நீட் தேர்வு தடை செய்ய, நீக்க கோரி இது வரை 60 லட்சம் பேர் கையெழுத்துப் பெற்றுள்ளோம்.




தமிழ்நாட்டில் இருந்து கடந்த 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரூபாய் வரியாக ஒன்றிய அரசு பெற்று உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுத்தது வெரும் 2 லட்சம் கோடி தான். ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு 9 லட்சம் கோடியை கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த வாரம்  மத்தியபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசியுள்ளார். அவருக்கு எப்போதும் என்னுடைய நினைப்பு தான். பிறப்பால் அனைவரும் சமம் என்று தான் பேசினேன், ஆனால் இனப்படுகொலை தூண்டினேன் என பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் திமுக ஆட்சியல் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். ஆமாம் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் கலைஞர் குடும்பம் தான், நான் மட்டும் அல்ல அனைவரும் கலைஞர் பேரன்கள், வாரிசுகள் தான்.


சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது. 9 ஆண்டுகள் பாஜக அரசிடம் 7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை. 1 கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி செலவு கணக்கு. ரமணா பட பாணியில் இறந்த போன  88  ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு கொடுத்துள்ளது பாஜக அரசு. ஊழல் ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குள் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. வருகின்ற 2024 தேர்தலில் நீங்கள் எல்லாம் பாஜகவை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட முன் வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.