கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரைக்கு 110 எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் TN 38 N 2658 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த பேருந்து இயக்கப்பட்டபோது, பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததால் பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் ஏறியவுடன் சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.


நடத்துநர் பயணி இடையே வாக்குவாதம்


அப்போது பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் ஓடுவது தெரிந்துள்ளது. பின்னர் இது குறித்து நடத்துனரிடம் பலகை உறுதியாக உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து நடத்துநர் முறையாக பதில் சொல்லாததை அடுத்து பயணிக்கும், நடத்துநருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடத்துனருடன் பயணி ஒருவர் வாக்குவாதம் செய்த நிலையில், மற்றொரு பயணி அதை வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டார். பின்னர் இதை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து விஷ்ணு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக பரவியது. மேலும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


இருவர் பணியிடை நீக்கம்


இந்நிலையில் பலகையில் விரிசலுடன் பேருந்தை வழித்தடத்தில் இயங்க அனுமதித்த கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து கோட்ட மேலாளர் ஸ்ரீதர் உத்திரவிட்டுள்ளார். உடனடியாக பேருந்தை சரி செய்யவும் அறிவுறுத்த பட்டுள்ளது. பேருந்து பழுதடைந்து இருப்பதை முறையாக ஆய்வு செய்யாமல், வழித்தடத்தில் இயக்க அனுமதித்ததால் கிளை மேலாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read : The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை