கோவை வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. அப்பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் இரவு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலபடுத்தப்பட்டு இருந்ததால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்தனர்.




பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், திராவிடர் கழகத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலை முன்பு திரண்ட திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு திராவிடர் கழகம், மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திக, தபெதிக, திமுக, திவிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.




பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெரியார் சிலைக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அருண் கார்த்திக் என்பவர் பெரியார் சிலையை அவமரியாதை செய்ததும், அதற்கு அவரது நண்பர் மோகன்ராஜ் உதவியதும் தெரியவந்தது.




இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சாகா பயிற்சிகளுக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடிபோதையில் பெரியார் சிலையை அவமரியாதை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அருண்கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவரையும் போத்தனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண