கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று காலை முதல் கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.


இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், நர்கேலா சத்யம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ் கோயாஸ் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரூன் கோஸ் என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரூன் கோஸ் உயிரிழந்தார். இதனால் இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்ததாக உயர்ந்தது.


இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஜெகநாதனின் மனைவி கொல்லிடமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சுற்றுச்சுவர் இடிந்து விழ வாய்ப்பு இருப்பதாக தொழிலாளர்கள் எச்சரித்ததை மீறி, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பணி செய்ய வைத்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார். இதன் பேரில் கட்டுமான ஒப்பந்ததாரர் சீனிவாசன், பிராஜக்ட் மேனேஜர் சாதில் குல் அமீர், சைட் இன்ஜினியர் அருணாசாலம் ஆகிய 3 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிராஜக்ட் மேனேஜர் சாதில் குல் அமீர், சைட் இன்ஜினியர் அருணாசாலம் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


இதனிடையே உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் இன்று மாலை அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து விமான மூலம் ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இறந்த நபர்களின் குடும்பத்தாருக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர், காப்பீடு நிறுவனம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றின் வாயிலாக உரிய நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண