கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த செய்தி, மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலை ரயில் பாதையில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, விரைவில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு தொகை முழுவதும் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் விரைவில் பராமரிப்பு பணிகளை முடித்து, மலை ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




மலை இரயில் பயணம்


சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயில் பயணம் செய்வது என்பது, ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது.


மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிள் இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.