இந்தியாவிலே மதநல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மாற்று மத கோவில் கட்ட தேவையான நிலம் மற்றொரு சமூகம் கொடுப்பது என்பது மிகவும் அரிதான சம்பவம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் திருப்பூரில் அரங்கேறி உள்ளது. திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இந்து கோயிலுக்கு நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள்:


இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளி வாசல் உள்ளது. ஆனால் இந்து மக்கள் வழிபாடு செய்ய எந்த கோவிலும் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள், அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தனர். இந்த நிலை அறிந்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர்.  




சீர்வரிசையுடன் வந்து அசத்தல்:


இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் அந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். அப்போது இஸ்லாமியர்களுக்கு இந்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் ஒற்றுமை:


மேலும் கோவில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். விநாயகர் கோவில் கட்ட முஸ்லிம்கள் நிலத்தை தானமாக வழங்கியதோடு, கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை கொண்டு தந்தது மகிழ்ச்சியை தருகிறது. மதத்தை தாண்டி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கு உதாரணமாக இந்த சம்பவம் இருக்கிறது” எனத் தெரிவித்தனர். விநாயகர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் நிலத்தை தானமாக வழங்கியதோடு, சீர்வரிசை கொண்டு வந்து தந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.