கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை அடுத்த லிங்காபுரம், மொக்கை மேடு, உலியூர் ஆகிய கிராமங்கள் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ளன. பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வரும் நீர் அணையில் கலக்கும் பகுதி வனப்பகுதி அமைந்துள்ளதால், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். மேலும் மாயாற்றில் இருந்து வரும் நீரும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கலப்பதால் மாயாற்றில் உள்ள முதலைகள் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது காணப்படும். மேலும் தண்ணீர் வற்றிய நிலையில் முதலைகள் மேடான பகுதிகளில் காண முடியும். இதனிடையே சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.


அப்போது வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. அதனை உற்றுப் பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சில மணி நேரத்திற்கு பிறகு முதலையை கயிறு கட்டி பிடித்தனர். பின்னர் முதலையை பிடித்த வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்று பவானி சாகர் அணைப்பகுதியில் விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.




 


 






வனத்துறையினர் எச்சரிக்கை


இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் கூறுகையில், ”கோடை காலம் துவங்கும் முன்னரே தற்போது கோடை வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் பவானிசாகர் அணியின் நீர்மட்டம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் வெகுவாக சரிந்து உள்ளது. இதனால் நீரில் இருக்கும் முதலை அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ்செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம். தற்போது அதனை பிடித்துள்ளோம். சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்க உள்ளோம். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்து வருவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனவிலங்குகள் அதிகமாக வெளிவர வாய்ப்பு உள்ளதால், தோட்ட காவலுக்கு செல்லும் விவசாயிகள் கூலித் தொழிலாளிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவித்தால் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட முடியும்” எனத் தெரிவித்தார்.


இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ”பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கத்தை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இரவு நேரங்களில் தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகள் விவசாய நிலங்களை அவ்வப்போது சேதப்படுத்தினாலும், முதலைகள்  விவசாய நிலங்களுக்குள் வந்ததில்லை. இதுவே முதல் முறை  முதலை. இருப்பதை அறியாமல் யாராவது அருகில் சென்று இருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.