கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, கோவையில் காமாட்சிபுரி ஆதீனத்தை உருவாக்கியவர். காமாட்சிபுரி ஆதினத்தின் மூலம் ஆன்மிகப் பணிகளோடு, தேசியப் பணிகளிலும், சமுக சேவையிலும் ஈடுபட்டு வந்தவர். அனைவருக்கும் ஆன்மிக அருளை வாரி வழங்கியவர். எளிமையின் இலக்கணமாய் இருந்து, அனைவரும் அணுகுவதற்கு எளிதாக திகழ்ந்தவர். தேசியம் தழைக்க ஆன்மிகமும், ஆன்மிகம் தழைக்க தேசியமும் தேவை என்பதை உணர்ந்தவர்.அதனால்தான், ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற தேசிய சக்திகளுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்தார்.


கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லங்களை நடத்தி வந்தார்.  இந்து சமுதாயத்திற்கு பிரச்சனைகள் வரும்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல், நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர். போராட்டக்  களத்தில் பலமுறை அவரது துணிவைக் கண்டு வியந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்றும் எனக்கென பிரத்யேக அன்பும் ஆதரவும் அளித்து, ஒவ்வொரு தேர்தலிலும் உறுதுணையாக நின்று ஆதரவு அளித்தவர். இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் தொண்டாற்றுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சுவாமிகளின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு எனக்கு மட்டுமன்றி ஆன்மிக உலகிற்கும், தேசிய சக்திகளுக்கும் பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் பக்தர்கள், காமாட்சிபுரி ஆதீனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன். சுவாமிகளின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.


அண்ணாமலை இரங்கல்


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ”கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


இந்து முன்னணி இரங்கல்


இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்துள்ளார். ஆன்மீகத்திற்காகவும் இந்து சமுதாய ஒற்றுமைக்காகவும், அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர். தமிழகத்தில் நாத்திக சக்திகளால் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது, இந்துக் கடவுள்களை  யார் இழிவாக பேசினாலும் அவர்களின் நாக்கை கூட அறுக்க தயங்க தேவையில்லை என்று பொதுவெளியில் பகிரங்கமாக பேசியவர். இந்து தர்ம போராளியாக ஏற்றத்தாழ்வுகளை களைந்திடும் புரட்சியாளராக வாழ்ந்தவர் சிவலிங்கேஸ்வரர் ஸ்வாமிகள்.


கோவையில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு விதமான சேவைப் பணிகளை செய்தவர். இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். விடுதலைப் போராட்ட வீரர்களின் மீது தீரா பக்தி கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை எடுத்துக் கூறுவதில் பேரார்வம் உடையவர். புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளர். தேசியவாதி ஆன்மீகவாதி என்ற பல முகங்களைக் கொண்ட சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்துமுன்னணி ஆறுதல் கூறுகிறது. சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதங்களில் இளைப்பாற இந்துமுன்னணி வேண்டிக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்