கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம்  பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று பள்ளி விடுமுறை என்பதால் அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாயார் மாலை வந்து பார்த்த போது, அச்சிறுமி வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. பின்னர் சிறுமியின் செல்போனுக்கு அவர் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போது, சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அன்று காலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

Continues below advertisement




இதனைத் தொடர்ந்து தனது மகளை காணவில்லை என அவரது தாய் புலியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு ப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக துப்புரவு பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட் சீட்டில் சுற்றப்பட்டு பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில்  அங்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது. 




இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண