கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக, கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


முதற்கட்ட விசாரணை:


காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. 


பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.


உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு:


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.


மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.




முதலமைச்சர் பரிந்துரை:

 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையும் வெளியானது. 

அதில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அர்ச்சகர் சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்.ஐ.ஏ-விடம் ஒப்படைப்பு:

 

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை வசம் இருந்த, கோவை கார் வெடிப்பு சம்பந்தமான அனைத்து விசாரணை கோப்புகளும், தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.