கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் எனவும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் எனவும் கணிப்பு முடிவுகள், பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது. கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது. வேலை வாய்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58% இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர்.


வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. ஜி20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி20 யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது. யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்னை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.


5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை. சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் சிபிஎம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சிபிஎம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை. அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மதோதக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருகின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது. இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.