கோவை விமான நிலையம் அருகே உள்ள சிட்ரா சிக்னல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “சேரர், சோழர், பாண்டியர் போல் தலைவர் பிரபாகரன் வீரம் மிக்கவர். அதனால் தான் கொடியில் புலியை பயன்படுத்துகிறோம். மக்களவைத் தேர்தலுக்கு ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தயார் நிலையில் உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்கு பயணத்தை தொடங்கி விட்டோம்.


நான் ஒரு தமிழ் தேசிய மகன். தமிழ் நிலத்துக்காக தான் தேர்தலில் நிற்பேன். நாடாளுமன்ற தேர்தலில் என் தம்பி தங்கைகளை தோல் மீது ஏற்றி அவர்களை வழி அனுப்பி வைப்பேன். தமிழகத்தில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன். அவர்களை எதிர்க்கும் வகையில் போட்டியிட நான் தயார். நடிகர் கமல்ஹாசன் பாஜக அண்ணாமலை தேர்தலில் நிற்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்திய கூட்டணியில் நான் இல்லை/ அது ஒரு வேடிக்கையான கூட்டணி. மேற்கு வங்கத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர்க்கிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிராக இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் எதிராக கெஜ்ரிவால் நிற்கிறார்.  ஆனால் இந்தியா கூட்டணியில் அனைவரும் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.


அதிமுக கொடியில் அண்ணா உள்ளார். அப்படி இருக்கும் போது அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்தது தவறு. அண்ணா இருக்கும் போது தான் இந்த தொன்மையான வரலாறு பற்றி பேசப்பட்டது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்றாலும், பரவாயில்லை என்று அதிமுக பேசுவது பாராட்டத்தக்கது. பாஜக தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்தற்கு திமுக ஆர்.எஸ் பாரதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி கண்டனம் தெரிவிக்காமல் ஏன்  மௌனம் காத்து வருகின்றனர்?” எனத் தெரிவித்தார்.