பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த நேர்காணலில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார். இதன்பேரில் சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


வழக்கறிஞர் புகார்


அப்போது அவர் கூறுகையில், “இன்று இந்த வழக்கு சம்பந்தமாக சந்திப்பதற்காக சவுக்கு சங்கரை சிறையில் சென்று பார்த்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள கூறுகின்றனர்.


இந்த நிலையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு அளித்துள்ளோம். சவுக்கு சங்கர் அந்த யூ டியூப்பிற்கு பேட்டி அளித்தது சரியா தவறா என்பதை எல்லாம் நீதிமன்றம் தான் முடிவு செய்யும். தற்பொழுது மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காவல் துறை மாநிலமாக மாறி வருகிறது. போலீசார் நினைத்தால் யாரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. யார் ஒருவர் இந்த அரசுக்கு எதிராகவும் அரசின் அமைப்பிற்கு எதிராகவும் பேசினால் அவருடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது. சிறையில் இவருக்கு நடக்கும் கொடுமைகளை சாட்சியாக கூறுவதற்கு சக கைதிகள் தயாராக இருக்கின்றனர். கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.


சிறைத்துறை விளக்கம்


இந்த நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த துறைகள் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “சமூக ஊடகங்களில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் என்ற விசாரணை சிறைவாசி சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியதாக வெளியான செய்தி குறித்து தெரிவிக்கப்படுவது யாதெனில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களாலோ அல்லது மற்ற சிறைவாசிகளாலோ தாக்கப்படவில்லை. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சிறைவாசிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பேணுவதிலும் சிறை விதிகளை கடைபிடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.