நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கல்லார் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.


மலை மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையை அனுபவிக்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கவும் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் தங்குமிடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளூர் வாசிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.




எல்லைகளில் வாகன சோதனை


இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை 6:00 மணி முதல் நீலகிரிக்குள் வரும் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான இன்று, 518 தனியார் பேருந்துகள், 466 மினி பேருந்துகள், 15,787 கார்கள், 1289 வேன்கள், 2841 இருசக்கர வாகனங்கள், 545 வணிகம் தொடர்பான வாகனங்கள் என 21,446 வாகனங்களுக்கு இ - பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையான கல்லார் சோதனை சாவடியில் மாவட்ட வருவாய்த் துறையினர் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.


இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் நுழைய முயலும்  வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தவிர நீலகிரி மாவட்ட எல்லை உட்பட்ட 12 இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


TN E-Pass Registration: ரொம்ப கஷ்டப்படாதீங்க: கொடைக்கானல், ஊட்டிக்கு சொடக்கு போடும் நேரத்தில் இ-பாஸ்: பெறுவது எப்படி?