பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார். இதன்பேரில் சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் காவல் துறையினர், கோவைக்கு அழைத்து வந்தனர்.


விபத்துக்குள்ளான வாகனம்


இதனிடையே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்கு உள்ளானது. போலீஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு வரும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


திமுக மகளிரணி போராட்டம்




இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர். நீதிமன்றத்திற்கு முன்பாக திரண்டிருந்த திமுக மகளிரணியினர் போலீஸ் வாகனத்தை மறித்து, கையில் செருப்புகளோடு சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞரும், ரிமாண்ட் செய்ய வேண்டுமென அரசு தரப்பு மற்றும் திமுக பெண் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். பின்னர் சவுக்கு சங்கரை வருகின்ற 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்டாலின் குடும்பம் மேலும் மேலும் கொள்ளையடிக்க சவுக்கு ஊடகம் தடையாக இருப்பதால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.