கோவை சித்ரா பகுதியில் டி.என்.பி.எல் விளையாடி கொண்டிருக்கும் திருப்பூர் அணியான டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்களான நடராஜன், சாய் கிஷோர், விஜய்சங்கர் மற்றும் இந்த அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.


ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி பேசுகையில், “இந்த அணியின் கேப்டன் விஜய்சங்கருக்கு கடைசி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால், சாய் கிஷோரை புதிய கேப்டனாக நியமிக்கிறோம்.  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்போது நன்கு விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து ஆண் விளையாட்டு வீரர்கள் எப்படி முன்னேறி நாட்டிற்காக விளையாடுகிறார்களோ, அதே போன்று பெண்களுக்கும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த டிஎன்சி முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.


கேப்டன் சாய் கிஷோர்


சாய் கிஷோர் பேசுகையில், “இந்த அணியை இதற்கு முன்னால் இருந்தவர்கள் நன்கு வழிநடத்தி சென்று இருக்கிறார்கள். அணியில் திறமையான வீரர்கள் மூத்த வீரர்கள் இருப்பதால், எனக்கு கிடைத்த அனுபவங்களையும் திறமை மிக்க வீரர்களையும் கொண்டு இந்த அணியை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன்.  விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சேலஞ்சு இருந்தால் தான் கிக் இருக்கும். அனைத்தும் ஈசியாக இருந்தால் திறமை தேவைப்படாது. தனியாக நான் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை. கிரிக்கெட் என்று வந்தால் கேப்டன் என்பது ஒரு பெயர்தான். அணியில் உள்ள 11 பேரும் கேப்டன் ஆக மாறிவிட்டால் ஈஸியாக இருக்கும். டீம் அட்மாஸ்பியர் நன்றாக உள்ளது. அதற்கு காரணம் அணியின் உரிமையாளர் லீடர்ஷிப் பயிற்சியாளர்கள் தான். திறமையால் கண்டிப்பாக எந்த இடத்திலும் குறைவு இல்லை.


இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சிறிய ப்ளாக் இருக்கிறது. ஏதோ ஒரு பிரஷர் காரணமாக அது இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் நாம் சாந்தமாக இருந்தால் நம் பக்கம் வெற்றி வந்து விடும். கோயமுத்தூர் எப்பொழுதும் லக்கி இடமாக இருந்து உள்ளது கண்டிப்பாக இங்கு ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும். கோவையை பொறுத்தவரை மைதானம் நன்றாக இருக்கும். இருப்பினும் என்னதான் நாம் பழகி இருந்தாலும், அப்போதைய சூழல் முடிவை அப்போதுதான் எடுக்க முடியும்.


தாங்கள் ரன் ரேட்டில் சரியவில்லை. ஓரிரு வெற்றிகள் கிடைத்தால் தாங்கள் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கோவையை ஒரு கிரிக்கெட்டிங் ஹப் கோவை மக்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள்” என தெரிவித்தார்.


நடராஜன் பேட்டி


இதையடுத்து பேசிய விஜய் சங்கர், ”உடலில் காயம் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு விளையாட முடியாது. இனி வரும் நாட்களில் இந்த அணியை சாய் கிஷோர் கேப்டனாக இருந்து வழி நடத்துவார். எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது” என்றார். நடராஜன் பேசுகையில், “அணி இரண்டு முறை தோல்வியை சந்தித்து இருந்தாலும் அணியின் அட்மாஸ்பியர் நன்றாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் பிரஷர் காரணமாக தவறுகள் நடந்திருக்கிறது.


அதனை இனிவரும் ஆட்டங்களில் சரி செய்தால், வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்றது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த விஜய் சங்கர், அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமான ஒன்றுதான்.  


மக்களைப் போன்று நாங்களும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ரிட்டயர்மென்ட் அறிவிப்புகளை அறிவிப்பது குறித்தான கேள்விக்கு இது வழக்கமான ஒரு நடைமுறைதான், ஒருவர் சென்றால் அந்த இடத்திற்கு மற்றொருவர் வந்து தான் ஆக வேண்டும் என பதில் அளித்தார். இந்திய அணி குறித்தான கேள்விக்கு நடராஜன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.