கோவையை சேர்ந்த யூ டியூபரான 7 வயது சிறுவன் ரித்விக்கின் வீடியோ காட்சிகள், அண்மையில் வைரலாகி வரவேற்பைப் பெற்றன. அதேசமயம் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் ரித்விக்கின் தந்தை ஜோதிராஜ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


அதில், “கடந்த வாரம் ரித்விக் நடித்து யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி மிகப்பெரிய வைரல் ஆனது. பொதுமக்களும் ஊடகங்களும் வெகுவாக பாராட்டினர். தற்போது ரித்விக் குறித்து நேர்மையான விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும், சில எதிர்மறையான விமர்சனங்களையும் விவாதங்களையும் நான் பார்க்கிறேன். விமர்சனங்கள் அனைத்திற்கும் நான் மதிப்பளிக்கிறேன். சில விளக்கங்களை மட்டும் இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன். முதலில் இந்த காணொளிகள் ரித்விக் விரும்பி என்னை கேட்டதால் மட்டுமே உருவாக்கினோம். ரித்விக்கே பல வசனங்களை சொல்வார், பல காட்சிகளை உருவாக்குவார். இவை அனைத்தும் நானும் ரித்விக் மற்றும் எனது மனைவி  மூவரும் மகிழ்ச்சியாக கலந்து பேசிக்கொள்வோம்.  இறுதியாக ரித்விக்தான் கதையை முடிவு செய்வார். 


சமீபத்திய ரித்விக்கின் காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து நானும் ரித்விக் மற்றும் எனது மனைவியும் பல ஊடகங்களில் கலந்துகொண்டு வைரல் ஆன காணொளி குறித்து கருத்துகளை கூறியுள்ளோம். அதில் ரித்விக் பல பேட்டிகளில் பத்து மணிநேரம் படப்பிடிப்பு நடக்கும். பத்து டேக் எடுப்பேன் என்று கூறியுள்ளார். நானும் அதை கூறியுள்ளேன். அந்த பத்து மணிநேரம் பத்து டேக் குறித்து முக்கியமாக பேச வேண்டியுள்ளது. முதலில் எங்களது ஒரு காணொளியை ஒரே நாளில் எடுப்பது இல்லை. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். ஞாயிறு அன்று இரண்டு மணிநேரம் நான் கதை வசனம் எழுதுவேன். திங்கள் அன்று ரித்விக்கின் மூன்று மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் முடிவடைந்ததும் மதிய உணவிற்கு பிறகு ரித்விக் சிறிது ஓய்வு எடுப்பார். பின் மாலை 4 அல்லது 5 மணிக்கு எங்களது படப்பிடிப்பு துவங்கும். முதல் நாள் மூன்று மணிநேரம் படப்பிடிப்பு நடத்துவோம். எங்களது வீடு பிரதான சாலையை ஒட்டியுள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் செல்லும், அந்த சத்தம் வரும்போது காணொளியை நிறுத்த வேண்டியிருக்கும். இதனால் முதல் நாள் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் ஆகும். வாகன சத்தம் இல்லாமல் இருந்தால் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்துவிடும்.




இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளும் முதலில் நான் சொன்னதுபோல் ரித்விக்கின் ஆன்லைன் வகுப்பு முடிந்து மதிய உணவு, ஓய்வுக்கு பிறகு இரண்டில் இருந்து மூன்று மணிநேரம் படப்பிடிப்பு நடைபெறும். மூன்று நாட்களின் மொத்த படப்பிடிப்பு நேரத்தைத்தான் நாங்கள் பத்து மணிநேரம் ஆகும் என்பதை கூறியுள்ளோம். இதை நாங்கள் ஊடகத்தில் சரியாக பதிவு செய்யாததால் சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்கிறார்கள், விவாதம் நடைபெறுகிறது. நானும் எனது மனைவியும் ஒருபோதும் ரித்விக்கிற்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. ரித்விக் எனது வசனங்களை கேட்டு மிகவும் சிரித்து மகிழ்வார்.


முக்கியமாக பெற்றோர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் ரித்விக் காணொளியை பார்த்து உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து ரித்விக் காணொளி போலவே உருவாக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைகள் ரித்விக்கை விட வேறு விசயங்களில் அதிக திறமை படைத்தவர்களாக கூட இருக்கலாம் குழந்தைகளின் விருப்பம் என்னவோ அதற்கு முக்கியதுவம் கொடுங்கள். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கு ஊக்கம் கொடுங்கள். மேலும் எங்களுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் தினம் ஒரு காணொளி போடமுடியும் ஆனால் ரித்விக் இதை பொழுதுபோக்காக செய்வதால் வாரம் ஒரு காணொளி மட்டுமே பதிவேற்றம் செய்கிறோம். நீங்கள் கேட்கலாம் பின் எதற்கு ஒரு தனியார் நிறுவனத்தோடு, ஒப்பந்தம் செய்தீர்கள் என்று, காரணம் நாங்கள் ரசித்த காணொளியை மக்களும் ரசிக்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு செல்லவேண்டும் என்று நானும் எனது மனைவியும் ஆசைப்பட்டோம் அவ்வளவுதான்.


இந்த நொடியே ரித்விக் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று சொன்னால் மறுகணமே நாங்கள் யூ டியூப்பை விட்டு வெளியேறிவிடுவோம். மேலும் மக்களை எங்களால் முடிந்தவரை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நாங்கள்ஆபாசமான காட்சிகளையோ, ஆபாசமான வசனங்களையோ பயன்படுத்தவில்லை, ஒருவேளை இந்த காணொளிகளில் வசனங்களோ,  காட்சியோ உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது வருடம் முழுவதும் குழந்தைகள் படிக்கும் கல்வி அவர்களின் வயதிற்கு ஏற்றதுபோல் உள்ளதா என ஆரோக்கியமாக விவாதிப்போம். சில விமர்சனங்கள் எங்களை காயப்படுத்துகிறது. எது நடந்தாலும் நாங்கள் மக்களை மகிழ்வித்துக்கொண்டு இருப்போம். நிரந்தரம் இல்லாத இந்த மனித வாழ்க்கையில் இருக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு செல்வோம். ரித்விக்குக்கு கிடைத்த இந்த புகழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது நிலைக்குமா என்றுகூட எங்களுக்கு தெரியாது. எது நடந்தாலும் மகிழ்ச்சியோடு நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.