கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 303 பேரிடம் விசாரணை நடந்து உள்ளதாகவும், மேலும் பலரிடம் விசாரணை நடைபெற இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை எனவும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். 




இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 
இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயகுமார், ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் மட்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். மற்றவர்கள் ஆஜராகவில்லை.




வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தற்போது வரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் 303 நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தகவல் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் பலரிடம் விசாரணை நடைபெற இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை எனவும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண