கோவையில் மாநகர காவல் துறையினர் சார்பில் நடந்த பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.


காவல்துறை சார்பில் பொங்கல் திருவிழா:


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் காவல் அலுவலர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.


மாட்டு வண்டி ஓட்டிய கமிஷனர்:


அதன் பிறகு கோவை மாநகர் காவல் துறை சார்பில் பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டி நடைபெற்றது. பொங்கல் விழாவில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பொங்கல் வைத்து மாட்டு வண்டி ஓட்டினார். நிகழ்ச்சியை தொடர்ந்து ஓட்டி சைக்கிள் ஓட்டி, ஒயிலாட்டம் மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காவல் துறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.




இதேபோல கோவை மாவட்ட காவல் துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் அலுவலகத்தில்   சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.


பின்னர் குழந்தைகள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிசுகளை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலருக்கு அனைவரும் இணைந்து வளைகாப்பு விழாவும் நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்  மகிழ்ச்சி அடைந்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.