நடந்து முடிந்த கோவை மக்களவை தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும்  தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு 24 மணிநேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, கல்லூரியை சுற்றிலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்குள் வரக்கூடிய  வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.


முகவர்கள் வாக்குவாதம்


மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டைகள் காண்பித்து உள்ளே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வாகனங்கள் உள்ளிட்ட பிறரின் வாகனங்கள் கல்லூரியின் மைதானத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே  வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி பணிபுரியும் பேராசிரியர் ஒருவரின் கார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே நிறுத்தியதால், அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வேட்பாளர்களின் கார்களே உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் கல்லூரியில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் எப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அனுமதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் கல்லூரிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் மைதானத்தில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்த விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆட்சியரிடம் பாஜக புகார்




கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சார்ந்த 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சியில்  148,151 முதல் 160 வரை பூத்துகளில் அகர வரிசைப்படி மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் வைக்கப்படாமல், தலைகீழாக வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தாகவும், அந்த பகுதிகளில் மறு தேர்தல் நடத்தவும், இதனை மாற்றி வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.


இது குறித்து பாஜக சூலூர் ஒன்றிய கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கூறுகையில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலின் போது வேட்பாளர்களின் பெயர்கள் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் அகர வரிசையில் வைக்கப்படாமல் ஆளுங்கட்சிக்கு  சாதகமாக இருக்க வேண்டும் என்று தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளுடன் கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதே சமயம் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியல் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இதற்கு யார் காரணம் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநில தலைவரின் ஆலோசனையின் பேரில் போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.