வேலியே பயிரை மேய்ந்த கதை.. திருடனிடமே பணத்தை திருடிய காவலர் - சிக்கியது எப்படி?

ஏ.டி.எம் டெபிட் கார்டு மற்றும் பாஸ்வோர்டு ஆகியவற்றை காவலr ரஞ்சித் என்பவர் மிரட்டி வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பயன்படுத்தி ஆனந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

Continues below advertisement

திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியின் டெபிட் கார்டு மூலம் 4 லட்ச ரூபாய் பணத்தை திருடிய காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பகுதி சின்னகானூர். இப்பகுதியில் உள்ள இருவேறு இரும்பு உருக்காலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காவலரை தாக்கி விட்டு இரும்பு மற்றும் செம்பு திருடு போனது. இது தொடர்பாக அந்த உருக்காலைகளின் உரிமையாளர்கள் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இரும்பு திருடிய 8 பேரை சேவூர் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் திருடப்பட்ட இரும்பை வாங்கிய கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்த் என்பவரும் அடக்கம். ஆனந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆனந்த் சிறை செல்வதற்கு முன்பாக அவரது ஏ.டி.எம் டெபிட் கார்டு மற்றும் பாஸ்வோர்டு ஆகியவற்றை சேவூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர் மிரட்டி வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பயன்படுத்தி ஆனந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

இதனிடையே அண்மையில் ஆனந்த் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனந்த் தனது வங்கிக் கணக்கை சரி பார்த்துள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் இருந்த 4 லட்ச ரூபாய் பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து வங்கியில் விசாரித்த போது தனது டெபிட் கார்டை பயன்படுத்தி தான் பணம் எடுத்திருப்பதும், தன்னை மிரட்டிப் பெற்ற ஏடிஎம் டெபிட் கார்டு மூலம் காவலர் ரஞ்சித் 4 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இருப்பதும் தெரியவந்தது. காவலரே பணத்தை திருடியிருப்பதை அறிந்து, ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


இதையடுத்து பணத்தை திருடிய காவலர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆனந்த் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சேவூர் காவல் நிலையத்தில் இருந்து ரஞ்சித், பணியிட மாறுதலில் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விசாரணையில் காவலர் ரஞ்சித் பணத்தை எடுத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து காவலர் ரஞ்சித்தினை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சிங் உத்தரவிட்டுள்ளார். திருடனிடம் காவலரே திருடி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola