கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று  வடவள்ளி அருகேயுள்ள அஜ்ஜனூர் ஸ்ரீ ராம் கார்டன் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (33),  மார்க்கண்டன் (33), பிரவீன் (31) மற்றும் தினேஷ் (27) ஆகிய 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8.500 கிலோ கிராம் கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்  ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


இதேபோல நேற்று சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணி புதூர் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கார்த்திக் ராஜா (20) என்பவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மேலும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரயில்வே ஃபீடர் சாலை அருகில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வன் (30)  என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள்  கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண