கொரோனா தொற்றுப் பரவல் பலரது உயிர்களை பறித்துள்ள நிலையில், அதனை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு பலரது வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. கொரோனா முதல் அலையில் முடங்கிய தொழில்கள் மீண்டு வருவதற்குள், இரண்டாவது அலை பரவலால் மீண்டும் முடங்கியுள்ளன. இதனால் பலர் வருவாய் இழந்து, வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதிலும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கூட வழங்கப்படவில்லை. தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இதனால் பெரும்பாலான கடைகள், நிறுவனங்கள் பூட்டியே கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் வருவாயின்றித் தவித்த கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.




கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பரத் சேகர். இவர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்படக் கலைஞரான பணியாற்றி வருகிறார். வீட்டு விசேஷங்கள், திருமண நிகழ்வுகள் என ஆர்டர்களில் எப்போதும் பிஸியாக இருந்த இவருக்கு, கொரோனா ஊரடங்கு போதாத காலமாக மாறிவிட்டது. மற்ற தொழில்களைப் போலவே ஊரடங்கில் புகைப்பட தொழிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக வருவாய் இழந்த பரத் சேகருக்கு அலுவலக வாடகை, கடனில் வாங்கிய கேமரா மற்றும்  உபகரணங்களுக்கு தவணைத் தொகை கட்ட இயலாமல் போனது. ஒரு கட்டத்தில் வீட்டு வாடகை கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தைக் காப்பாற்ற மாற்றுத் தொழிலுக்குச் செல்லும்முடிவை அவர் எடுத்துள்ளார். அப்போது ஊரடங்கில் தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி விற்பனையை கையில் எடுத்தார்.  தினமும் தள்ளு வண்டியில் வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறார், புகைப்படக் கலைஞர் பரத் சேகர்.




இதுகுறித்து பரத் சேகர் கூறுகையில், “23 வருடங்களாக போட்டோகிராபி தொழிலை நேசித்து செய்து வந்தேன். கொரோனா பரவலால் கடந்த ஒரு வருடமாக தொழிலே முடிந்து போகும் சூழல் உள்ளது. தற்போது ஊரடங்கினால் ஆபிஸ் வாடகை, கேமரா லோன், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வருமானத்திற்கு வேறு வழியின்றி காய்கறி விற்பனை செய்து வருகிறேன். ஸ்மைல் ப்ளீஸ் என்று சொல்லிக் கொண்டு இருந்த நான், தக்காளி, வெங்காயம் என்று கூவி காய்கறி விற்பனை செய்யும் சூழலை கொரோனா ஊரடங்கு ஏற்படுத்தி விட்டது. இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நகர்த்தி வருகிறேன்.




என்னைப் போலவே பல புகைப்பட கலைஞர்களும் வாழ்வாதாரம் இழந்து, செய்வதறியாது தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிகளில் தளர்வுகள் அளித்து புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.