சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில்  நடைபெற்றது. இதில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன்  முதலில் சமவெளிப்பகுதிகளில் மிளகு சாகுபடி செய்வது குறுத்தும் அதற்காக நாம் இயற்கை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென விவரித்தார். பின்னர் மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர் எனவும் ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.


புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர் என கூறிய அவர் சில விவசாயிகள் ஒரு ஏக்கர் மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக தெரிவித்தார்.  மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது என்றார். மேலும் இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன என்றார்.




இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர் என கூறினார். குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர் எனவும் தெரிவித்தார்.


பின்னர் பேசிய ஆனைமலை பகுதியை சேர்ந்த விவசாயி வள்ளுவன், தென்னை விவசாயம் செய்யும் பொழுது செலவை விட வருவாய் குறைவாகவே இருந்ததாகவும், இத்தகைய சூழலில் காவிரி கூக்குரல் இயக்கத்தினர் தென்னை க்குள் பல பயிர்கள் பல அடுக்கு முறையில் சாகுபடி செய்ய முடியும் என அத்ற்கான ஆலோசனை வழங்கியதாகவும் அதன்படி செய்த போது இது நல்ல லாபத்தை ஈட்டி தந்ததாக தெரிவித்தார். முதலில் இந்த சமவெளியில் மிளகு சாகுபடி என்பது சாத்தியம் இல்லை என்பதில் உறுதியாக இருந்ததாகவும் ஆனால் அவர்களில் ஆலோசனை படி செய்ததில் விளைச்சல் வந்து விளைச்சல் அதிகரித்ததாக கூறினார். இது தென்னையை காட்டிலும் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட முடிவதாக தெரிவித்தார். இது இயற்கை விவசாயத்தையும் ஊக்குவித்து லாபத்தை ஈட்டி தந்ததாக கூறினார்.


பின்னர் பேசிய தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த பெண் விவசாயி நாகரத்தினம் மாணிக்கராஜ், இந்த இயக்கத்தினர் கூறும் முன்பே மிளகு விவசாயம் செய்ய ஆரம்பித்ததாகவும் ஆனால் அனைத்து நாட்களும் அழுகிப்போனதாக தெரிவித்தார். பின்னர் காவிரிக்கும் குரல் இயக்கத்தின் பயிற்சியில் பயிற்சி பெற்று அதன்படி மிளகு விவசாயம் செய்து மிளகு விவசாயம் நல்லமுறையில் செய்ததாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும் என்றார்.