வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு! நடப்பாண்டில் மட்டும் 7 பேர் மரணம்!

வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Continues below advertisement

வெள்ளியங்கிரி மலை:

10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் மலையில் தற்கால மருத்துவ முகாம்கள் அமைத்தனர். அங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.

தொடரும் உயிரிழப்புகள்

இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து மார்ச் 30 ம் தேதி சென்னையை சேர்ந்த ரகுராமன் (60) ஐந்தாவது மலையில் சீதை வனம் அருகில் சென்ற போது, அவருக்கு உடல் நலம் பாதிப்பினால் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற 47 வயதான நபர், வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார்.

அவர் முதல் மலையில் உள்ள குரங்காட்டி பள்ளம் அருகில் சென்ற போது, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததை பார்த்த உடன் வந்தவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் அவரை வனத்துறையினர் சுமந்து மலை அடிவாரம் கொன்டுவந்தனர்.

மலை அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் சோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அறிவுறுத்தல்

ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola