கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் மலையில் தற்கால மருத்துவ முகாம்கள் அமைத்தனர். அங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.


இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து மார்ச் 30 ம் தேதி சென்னையை சேர்ந்த ரகுராமன் (60) ஐந்தாவது மலையில் சீதை வனம் அருகில் சென்ற போது, அவருக்கு உடல் நலம் பாதிப்பினால் உயிரிழந்தார். கடந்த 14 ம் தேதி கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற 47 வயதான நபர், மலையேறும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர் திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.


ஒன்பது பேர் உயிரிழப்பு 


இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவர், இன்று மதியம் தனது நண்பர்கள் 10 பேருடன் வெள்ளியங்கிரி மலையேற வந்துள்ளார். பூண்டி அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டு, 10 பேருடன் அவர் மலையேறத் தொடங்கினர். ஒன்றாவது மலை ஏறும் போது சுமார் 1 மணியளவில் 200 படிக்கட்டுகள் ஏறிய போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உடனிருந்தவர்கள் அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக 5 மணிக்கு பூலுவபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு புண்ணியகோடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.