கோவையில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இரண்டு பிரிவினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று அப்பள்ளியின் அருகே இரு பிரிவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் அப்பள்ளியில் படித்த 17 வயதான முன்னாள் மாணவரிடம் தெரிவித்துள்ளனர்.




அங்கு வந்த அந்த முன்னாள் மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர்களை தாக்கிய முன்னாள் மாணவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 




இதில் ஆலாந்துறையை சேரந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமார் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் குத்தப்பட்டதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு தனது சித்தப்பாவை கத்தியால் குத்தியதாக வழக்கு தொடரப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின் ஜாமீனில் வெளிவந்த அவர் தொடர்ந்து அடிக்கடி தகராறுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களை கத்தியால் சராமரியாக தாக்கியதில், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண