தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் மலை இரயிலில் பயணிக்க முடியும். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலம் இரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை இரயில் கவர்ந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை இரயிலில் பயணித்து வருகின்றனர்.




இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை இரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலை இரயில் போக்குவரத்து வருகின்ற 6 ம் தேதி முதல் துவங்கும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 4 மாதங்களுக்குப் பிறகு மலை இரயில்  தனது பயணத்தை மீண்டும் துவக்க உள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மலை இரயிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும் எனவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




மேட்டுப்பாளையத்தில் இருந்து 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை மலை இரயில் கடந்து ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடையும். மலைப் பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல இரயில் மலையேறும். மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும். குகைகளுக்குள் ரயில் புகுந்து செல்வது திரில்லான அனுபவமாக இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகளை காண முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் வனவிலங்குகள் நடமாட்டத்தை பார்க்கலாம். இதனால் மலை இரயில் பயணம் என்பது ஊட்டியை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும். இதன் காரணமாக உதகைக்கு நீலகிரி மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்