கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கலையரங்கில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது பேசிய அவர், ”கோவையில் 2415 சாலைகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. கிராம சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் தரம் உயர்த்தப்படும். இதற்கான பணிகள் 15 நாட்களில் தொடங்கப்படும். கோவை விபத்து மாவட்டமாக உள்ளது. இதனால் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 37 பகுதிகள் விபத்து பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 13 இடங்களில் சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்தின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கவனம் கொண்டு செல்வேன்.




கோவையில் சாலைகளை சீரமைக்க கோரி, அதிமுக நடத்தும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை பார்த்து தெரிந்து கொண்டேன். சாலை விவகார போராட்டம் சிரிப்பு வருகிறது. இதற்கு 10 ஆண்டு ஆட்சி நடத்தியவர்கள் தான் காரணம். நாங்கள் வந்து ஒன்றரை ஆண்டு தான் ஆகியுள்ளது. தங்களை அடையாளப்படுத்த போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போட்ட சாலை தவறான சாலை. அதற்குப் போராடுகிறார்கள். கடனை வைத்து போன அரசு அதிமுக அரசு.


கோவையில் இரண்டு பாலங்கள் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிந்து விடும். எட்டு வழி சாலை திட்டம் என்பது கொள்கை முடிவு. சாலை போடப்படுமா, இல்லையா என்பதை முதல்வருடன் பேசி தான் முடிவு எடுக்கப்படும். மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சரியாகும். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்படும்.




அதிக ஆணைகள் வழங்கிய அரசு திமுக அரசு. கோவையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முதல்வர் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார். காரமடை, மேட்டுப்பாளையம் பைப்பாஸ் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதன் மூலம் நெரிசல் குறைக்கப்படும்.  ஆன்மீகம் அதிகமுள்ள ஊரில் கால்நடைகள் உள்ளன. அப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறநிலை துறை மூலமும் கால்நடைகள் கோசாலைகளில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


சிப்காட்டாக இருந்தாலும் சரி, புதிய சாலைகளாக இருந்தாலும் சரி. வளர்ச்சியை நோக்கித் தான் அரசு இந்த திட்டங்களைக் கொண்டு வருகிறது. அவற்றை நிறைவேற்ற, நிலங்களை கையகப்படுத்தித் தான் ஆக வேண்டும். புதிய சாலை அமைக்கப்பட்டால் அதில் பயனடைப் போவது அரசாங்கமா? இல்லை. விவசாயிகள், வியாபாரிகள் என மக்கள் அனைவரும் தான் பயனடையப் போகிறார்கள்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண