கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளபாளையம், செந்தேவி பாளையம், ராமநாதபுரம், கருவம்பாளையம் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்த இவரை அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.  பொதுமக்கள் மத்தியில் வாக்குசேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், ”முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். தொழில் துறையாக இருந்தாலும் சரி, நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்த அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கல்வி வளர்ச்சியிலும் சரி, பெண்கள் முன்னேற்றமாக இருந்தாலும் சரி பார்த்து பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது.




ஆனால், இதற்கு நேர் எதிரான அரசாக பாஜக உள்ளது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். 10 ஆண்டு காலம் போதாது என்று பதவிக்காக ஆசைப்பட்டு மீண்டும் மக்களை தேடி வாக்கு சேகரிக்க வருகின்றனர். மக்களுக்காக, தொழில் வளர்ச்சிக்காக, வேலைவாய்ப்பிற்காக பாஜக அரசு என்ன செய்தது என அவர்களிடம் கேளுங்கள். உள்ளூரை சேர்ந்த என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம். உங்களில் ஒருவனாக உங்களுக்கு பணியாற்ற காத்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். முதல்வர் தளபதியின் உத்திரவிற்கு இணங்க மக்களோடு மக்களாக நான் இருப்பேன் என கூறினார்.


வெள்ளக்கோவில் சாமிநாதன் வாக்குசேகரிப்பு


தொடர்ந்து, தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், பள்ளபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”திமுகவிற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் சோமனூர் பகுதிகளில் ஜவுளி தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. இங்கு துணி  ஏற்றுமதி செய்வது தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து தற்போது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் போலவே, இந்தியா கூட்டணி அரசும் அறிவித்துள்ள மகாலட்சுமி திட்டம். வருடம் ஒன்றுக்கு குடும்ப பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கக்கூடிய வகையில் சிறப்பான செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பொழுது, அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஒன்றியத்தில் ஊழல் ஆட்சியை விரட்ட, இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாக்கு இயந்திரத்தில் மூன்றாவது பட்டனை அமுத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.