கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதனிடையே அமைச்சர் முத்துசாமி விழா ஏற்பாடு பணிகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இது மேற்கு மண்டலத்துக்காக நடத்தப்படும் பொதுக்கூட்டம் கிடையாது, ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த  மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடத்தப்படும் கூட்டம். கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு விழா, இவ்வளவு பெரிய வெற்றி மற்றும் கூட்டணி வருவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா என்று மூன்றையும் சேர்த்து முப்பெரு விழா பொதுக்கூட்டமாக நடத்துகிறோம். இதில் என்னென்ன பகுதிக்கு என்ன திட்டங்கள் தேவை அந்த பகுதியில் இருக்கும் பிரச்னைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கூட்டத்தில் திட்டமிடுகின்றனர்.


கிரிக்கெட் மைதானம்


பொதுக்கூட்டத்திற்கு இரண்டு லட்சம் முதல்  மூன்று லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறோம். பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகின்றனர். 3 லட்சம் பேருக்கு மேல் வருகின்றனர். பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளம் 40 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் 40 புதிய எம்பிக்களும் அமரும் வகையிலும், கூட்டணி கட்சி தலைவர்கள் அமரும் வகையிலும் மேடையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்களித்த தமிழக மக்களுக்கு  அவர்களின் எதிர்பார்ப்புகளை கண்டிப்பாக செய்வோம் என்பதை உத்திரவாத படுத்தும் விதமாகவும் இந்த பொதுகூட்டம் நடத்தப்படுகின்றது.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து இருக்கிறார். அதில் நிறைய திருத்தங்கள் சொல்லி இருக்கின்றார். அவற்றை சரி செய்து, எந்த இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பது முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.  அதிமுகவினர் நினைப்பது போல மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பது கற்பனை இல்லை, மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் காட்டி இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.


கூட்டணி கட்சி தலைவர்கள்


கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்டோர்  பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.