அதிக மது அருந்தியதாக 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : மதுவில் சயனைடு கலந்து கொலைசெய்த நபர் கைது..

முன்பகையை தீர்த்துக் கொள்ள சயனைடு கலந்த வெளிநாட்டு மதுவினை குடிக்க கொடுத்து மூவரையும் கொலை செய்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

Continues below advertisement

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31). இவரது நண்பர்கள் முருகானந்தம் (55), சக்திவேல் (61). இவர்களில் பார்த்திபனும், சக்திவேலும் பெயின்டராக பணி புரிந்து வருகின்றனர். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்து வந்தார். நண்பர்களான மூவரும் கடந்த 3 ம் தேதி இரவு தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை 6 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். 

Continues below advertisement

அருந்ததியர் வீதி அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சக்திவேல் மட்டும் அந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். முருகானந்தம் பாரதியார் சாலையில் நடந்து சென்ற போது, மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்  இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.  இதனையடுத்து அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதனிடையே இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடிய போது, அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பார்த்திபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


பாதி அருந்திய நிலையில் கைப்பற்றபட்ட மதுபான பாட்டிலில் இருந்த மதுவினை காவல் துறையினர் பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும்  மூவரும் மது அருந்திய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மூவரும் மதுவில் சயனைடு விஷம் கலந்து கொலை செய்யப்பட்டு இருப்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) என்பவர் முன்பகை காரணமாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தீபாவளிக்கு வெளிநாட்டு மதுபானம் இருப்பதாக கூறி, சயனைடு கலந்த மதுபானத்தை குடிக்க கொடுத்து மூவரையும் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை கைது செய்த பந்தயசாலை காவல் துறையினர், சயனைடு மற்றும் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராஜசேகர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola