வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்

சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை லாபகமாக வேட்டையாடி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

Continues below advertisement

கோவை அருகே குடியிருப்புக்குள் புகுந்து கோழி ஒன்றை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இதனால் அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டு மாடுகள் ஆகியவை வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

சிறுத்தை நடமாட்டம்

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கோவை திருவள்ளுவர் நகர் அருகே உள்ள கணுவாய் மலைப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் தென்பட்டு வருகிறது. இரவு வேலைகள் மட்டுமின்றி பகல் வேலைகளிலும் சிறுத்தைகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில் கோவை கணுவாய் அருகே உள்ள பழனியப்பா லேஅவுட் பகுதியில் சக்திவேல் என்பவர் தனது வீட்டில் சிறு கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோழிகள் தொடர்ந்து சத்தமிட்டதால் சந்தேகம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு கோழி மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து சுவரின் மீது அமர்ந்திருந்த கோழியை லாபகமாக வேட்டையாடி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கணுவாய் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் அருகே ஆங்காங்கே புதர்கள் தென்படுவதால், அதில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை கோழியை பிடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola