மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆயுத பூஜையை விஜயதசமியை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றோம். தமிழர்களுடைய வாழ்க்கையில் ஆயுத பூஜை என்பது ஒரு மிக முக்கியமான பண்டிகை. அப்படிப்பட்ட ஆயுத பூஜைக்கு திமுக அரசின் ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கும் அறிக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  ஒவ்வொரு தமிழர்களுடைய வழிபாட்டு உரிமையை புண்படுத்தும் விதமாக இது இருக்கிறது. நேற்றைக்கு திருப்பூர் மருத்துவ கல்லூரியிலிருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் மருத்துவமனைக்கு மக்கள் போவது அவர்கள் குணமாக வேண்டும், அதே நேரத்தில் கடவுளிடம் வேண்டுவதற்காகவும் செல்கின்றனர். பல மருத்துவமனைகளில் கோவில் உள்ளது.


தமிழக அமைச்சர் சனாதனத்தை ஒழிப்போம் என சொன்னதை நிறைவேற்றுவதற்காக இந்து தெய்வங்களின் படங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாட கூடாது என்ற அறிக்கை வந்துள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சிக்கும், முதல்வருக்கும், பட்டத்து இளவரசர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள். இன்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களின் பிறந்த நாள். நாமக்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் போடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பெயர் வைப்பது தான் சாலச் சிறந்ததாக இருக்கும். அதுவே நாமக்கல் மக்களின் விருப்பமாகவும் உள்ளது. அதே நேரத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு தன்னுடைய இன்னுயிர் ஈத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக, 75 ஆவது அமிர்த பெருவிழாவில் எனும் இந்த சரியான நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெயர் வைப்பது தான் சிறந்ததாக இருக்கும்.


தமிழகம் முழுவதும் லியோ திரைப்படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் அவர்களை மிகவும் படுத்தி விட்டார்கள். ஒரு வழியாக இன்று படம் வெளிவந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்த கேள்விக்கு, “கோவையில் மிகப்பெரிய கொடூரமான சம்பவம் நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுமார் 70 பேருக்கு மேல் உயிர் தியாகம் செய்தனர். பல நூறு பேர் காயப்பட்டு இன்றைக்கும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழக அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு என்ன தண்டனை கொடுத்திருக்கிறார்களோ அந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எனவே தமிழக அரசாங்கம் ஓட்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம் ஒரு வெற்றியின் அடையாளமாகும். வெற்றிவேல் வீரவேல் என பண்டைய காலத்து அரசர்கள் போரில் ஜெயித்ததும் எப்படி முழங்கினார்களோ அதே போல் தான் இது. இந்தியா முழுக்க மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோசமிடுகின்றனர். இதுகுறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு ஜெய் ஸ்ரீ ராம் என தான் கூறினேன். இப்போதும் அதையே கூறுகிறேன். நமது மக்களின் உணர்வாகவே இதை பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி இதை அரசியலாக்க பார்த்து தோல்வி அடைந்துள்ளார். திமுகவினரின் ஆட்கள் அமைச்சர் அலுவலகத்திலும் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சென்று அராஜகம் செய்கின்றனர். அரசாங்கத்தை இப்படித்தான் இயக்க வேண்டும் என அறிவாலயத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் அதிகாரிகள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை தமிழக அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.


மீன்வளத் துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு 1800 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். ஆனால் பிரதமரின் படத்தை போடுவதற்கு தயங்குகிறார்கள். அதேபோல் 300 கால்நடை ஆம்புலன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அது 100% மத்திய அரசின் நிதி. அதில் மோடி அவர்களின் படத்தை கட்டாயம் போட வேண்டும். இந்த ஒரே காரணத்திற்காக வண்டிகளை வாங்கி எங்கேயோ ஒழித்து வைத்துள்ளனர். பாஜகவின் அகில இந்திய தலைமை கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கும். மகளிர் உரிமைத்தொகையை பொறுத்தவரை அனைவருக்கும் வழங்குவதாக கூறிவிட்டு தற்போது திமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். இது போன்று எல்லா துறைகளிலும் திமுகவினர் மட்டுமே பலன்களை அனுபவித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதேபோல் காப்பீடு உட்பட பல பலன்கள் மத்திய அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.