கோவை - அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1ஒரு கிலோ மீட்டர் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது . முதலில் கொடிசியாவில் நடைபெற்ற உலகப் பொது தொழில் மாநாட்டை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் கோவை உப்புலி பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தொலைவு நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின் பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார். தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் ரூபாய் 1791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக நீளமான இந்த மேம்பாலத்திற்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தில் உள்ள சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது: “இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது. உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வழித்தடத்தில் அண்ணாசிலை, பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது.
இதில் ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் தூர நீளத்து 8 இரும்பு கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது 725 டன் எடை கொண்ட தாகும். தூண்களில் முதலில் கட்டப்பட்டன. இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ஓடுதளம் காரிடர், தென்னம் பாளையத்தில் உள்ள தனியிடத்தில் தயாரித்து இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில் நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது.கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது.
கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் வழித்தடத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு, அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. விமான நிலைய ஏறுதளம் 577 மீட்டர், விமான நிலைய இறங்குதளம் 567 மீட்டர், ஹோப்காலேஜ் ஏறுதளம் 483 மீட்டர், இறங்குதளம் 527 மீட்டர், நவ இந்தியா ஏறுதளம் 561 மீட்டர், இறங்குதளம் 551 மீட்டர், அண்ணாசிலை ஏறுதளம் 411 மீட்டர், இறங்குதளம் 391 மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளது. அணுகு சாலையாக கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டரும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.