கோடநாடு கொலை: கூடுதல் விசாரணைக்கு அவகாசம் கேட்ட தமிழ்நாடு அரசு

இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், அந்த வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருப்பதால், அதனடிப்படையில் கூடுதல் விசாரணைக்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது

Continues below advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Continues below advertisement


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று நீலகிரி தனிப்படை காவல் துறையினர் சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது வாளையார் மனோஜ் நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என மனு அளித்தார். அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், அந்த வாக்கு மூலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதால், அதனடிப்படையில் கூடுதல் விசாரணைக்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola