கேரளத் திரை உலகில் பிரபல நடிகராக சுரேஷ் கோபி இருந்து வருகிறார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்டப் பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில் கோபி. இவர் நீதிமன்றம் ரத்து செய்த நிறைய ஆவணங்களை வைத்து நிலத்தை விற்க முயற்சி செய்ததாகக் கூறி, கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவர் கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த குற்றப் பிரிவு காவல் துறையினர் சுனில் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நில மோசடி குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், 'சுனில் கோபி கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கி உள்ளார். அதற்கான பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், பத்திரப் பதிவு செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, குறைந்த விலைக்கு நிலத்தை விற்பதாக கூறி சுனில் கோபி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு அதனை விற்றுள்ளார்.




அந்நிலத்திற்கு கிரிதரன் முன்பணமாக ரூ.97 லட்சம் வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கிய நிலையில், அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்த போது, அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுனில் கோபியைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தை திரும்பித் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சுனில் கோபி மீது கிரிதரன், கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சுனில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்’ என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் மூன்று வங்கிக் கணக்கில் இந்தப் பணத்தை சுனில் கோபி பெற்ற நிலையில், அந்த வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை பெற்று தந்த ரீனா மற்றும் சிவதாஸ் ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண