கோவை ரயில் நிலையம்  அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான  காமராஜ் பவனில் தெலுங்கானா மக்களவை உறுப்பினரும் முன்னாள் கேபினட் அமைச்சருமான உத்தம்குமார் ரெட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய உத்தம்குமார் ரெட்டி, “உத்தரபிரதேச மாநிலத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் விபத்து ஏற்படுத்தி 8 பேர் உயிரிழந்த சம்பவம் காட்டுமிராண்டி தனமானது. இது கண்டனத்திற்குரிய செயல். சம்பவம் நடைபெற்ற இடத்தின் மிக அருகிலேயே வேறொரு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த பிரதமர் மோடி ஏன் வருத்தம் கூட தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி பிரியங்கா தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.


லக்கிம்பூர் விவகாரம் குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் அமைதியாக இருப்பதை இந்திய மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை உண்மையான குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை. இந்த விவகாரத்தில் ஏன் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய பிரதமர் கூறவில்லை?. காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும். உச்சநீதிமன்றம் இந்த விவாகரத்தில் தலையிடாவிட்டால் உ.பி. காவலர்கள் வழக்கை மூடி மறைத்து விடுவார்கள். பிரதமர் மோடி அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுகிறார். அமோசன் மற்றும் இ காமர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்ட கட்டணமாக 8546 கோடி ரூபாய் செலுத்தி உள்ளது. வெளிநாட்டு நிறுவனமாக அமேசான் இவ்வளவு பெரிய தொகையை சட்ட கட்டணமாக கொடுத்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க யோசித்து வருகிறது. சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்காக ஆதரவாக மாற்றபடுவதால் சிறு குறு தொழில் முனைவோர் பாதிக்கபடுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.


பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசில் முக்கிய புள்ளிகள் பண பலன் அடைந்துள்ளனர். இது குறித்து பிரதமரோ அமைச்சர்களோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்த விவாகரம் தொடர்பாக எந்த மறுப்பையும்  பாஜக தெரிவிக்கமல் உள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்தியாவில் தடை செய்யபட்ட போதை பொருட்களை கடத்தி வரப்படுகிறது. சமீபத்தில் 3500 கிலோ ஹெரோயின் பொருட்கள் கைப்பற்றபட்டு உள்ளது. இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி. ஜூன், ஜூலை மாதத்தில் 25 ஆயிரம் கிலோ போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1,75,000 கோடி. அதானி குழுமத்திற்கு சொந்தமான துறை முகங்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல” என அவர் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்கத்தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றார். தகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். சீமானின் கொள்கைகள் எடுப்படாத நிலையில், இது போன்ற விமர்சனங்களை செய்து வருகின்றார். அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிக்கொள்கிறார். சென்னையில் DGP சைலேந்திரபாபுவிடம் இதனைப் பற்றி புகார் கொடுத்துள்ளோம். 7 தினங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க கட்சி சேர்ந்த புகாரே தவிர, தனிப்பட்ட புகார் இல்லை. விமர்சனங்கள் என்பது பொதுவானவையே. ஆனால் சீமான் அவர்கள் தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்க வகையில் இல்லை. இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் தான் தடை செய்யவேண்டும். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.