கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன். 27 வயதான இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனைவி ரேஷ்மாவுடன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். ரேஷ்மா 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இவரது வீட்டிற்கு கல்லுாரி மாணவி ஒருவர் வந்துள்ளார். சுஜனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அப்பார்ட்மென்டில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் துறையினர் வந்து பார்த்தபோது, சுஜனின் வீட்டினுள் அந்த பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சுஜனும், ரேஷ்மாவும் தலைமறைவாகினர். இது குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இதில் உயிரிழந்த பெண் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இளம் பெண்ணை கொலை செய்த சுஜன் மற்றும் ரேஷ்மாவை 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜனும், ரேஷ்மாவும் காதலித்து வந்த நிலையில், இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்காலிகமாக பிரிந்து இருந்துள்ளனர். அப்போது சுஜன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சுபலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 


இதனிடையே சுஜன் ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டு, பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டிக்கு வந்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருமணம் நடந்ததை மறைத்த சுஜன் அடிக்கடி சுபலட்சுமி உடன் ரகசியமாக செல்போனில் பேசியும் வந்துள்ளார். இந்நிலையில் சுபலட்சுமி கடந்த 2ம் தேதி சுஜனை சந்திக்க பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். சுஜனின் வீட்டுக்குச் சென்ற போது, சுஜனுக்கு திருமணம் நடைபெற்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது சுபலட்சுமிக்கும், ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த சண்டையின் உச்ச கட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா அருகே இருந்த கத்தியை எடுத்து சுபலட்சுமியின் உடலில் ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சுபலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் இருவரும் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண