கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்கிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


மழைப்பொழிவு விபரம்


நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சில பகுதிகளில் இடியுடனும் கனமழை பெய்தது. போத்தனூர், சாய்பாபா காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், ரயில் நிலையம், வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. தொடர் கனமழை காரணமாக சாலைகளின் தண்ணீர் தேங்கியதால் கோவை மாநகரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கே.ஜி. மருத்துவமனை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்கிரோவ் இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, நீலகிரி மலை இரயில் சேவை மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக நொய்யல் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.




கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் 984 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா பகுதியில் 120 மி.மீ. மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 115 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 78 மி.மீ மழையும், பில்லூர் அணை பகுதியில் 74 மி.மீ. மழையும், தொண்டாமுத்தூர் பகுதியில் 70 மி.மீ மழையும், மேட்டுப்பாளையத்தில் 69 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


வானிலை முன்னறிவிப்பு


இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வால்பாறை தாலுகாவில் மிக கனமழை பெய்யும் எனவும், மேட்டுப்பாளையம், பில்லூர் அணை, தொண்டாமுத்தூர், சிங்கோனா, சின்னக்கல்லார், வால்பாறை பிஏபி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீளமேடு, அன்னூர், சூலூர், கோவை தெற்கு, சிறுவாணி அடிவாரம், ஆழியார், சோலையார் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், பொள்ளாச்சி, ஆனைமலை, மதுக்கரை ஆகிய பகுதிகளில் லேசான மழையும், போத்தனூர் பகுதியில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், மாலை நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.