கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். 41 வயதான இவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமோதரன் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இதனிடையே தாமோதரன் அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் அவரது பெற்றோரின் ஊரான விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். தாமோதரன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். 


தாமோதரன் தற்போது மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஜடையம்பாளையம் கிராமம் வீராசாமி நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 10 ம் தேதி முதல் தாமோதரன் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி மாலை 6 மணிளவில் வீட்டில் தனியாக இருந்த தாமோதரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் தாமோதரன் வீட்டில் இரண்டு நாட்களாக இரவில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தமையால் சந்தேகத்தின் பேரில், இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தாமோதரன் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுகுமார் காரமடை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தாமோதரன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060).