கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.



இந்த நிலையில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்த ஆண் பயணி ஒருவர் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த கைப் பையை சோதனை செய்த போது, Corn flakes பாக்கெட்டில் சந்தேகத்திற்கிடமான பச்சை நிற பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை ஆய்வு செய்த போது அது கஞ்சா மற்றும் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.