நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது.


புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சுட்டுக் கொல்லாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், புலியின் இருப்பிடத்தை கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று 11 வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் டி 23 புலி சிங்காரா வனப்பகுதியில் தென்பட்டதாவும், ஒரு மாட்டினை அடித்துக் கொன்று உணவாக எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. புலியின் கால் தடங்களை வைத்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மூங்கில் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் புலியை வெளியே வரவழைக்கும் வகையில், மசினகுடி – சிங்காரா சாலையில் வனப்பகுதிக்குள் 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை புலி தாக்க வரும் என்பதால், அப்பகுதிகளில் பரண்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புலி விரைவில் பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.