திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேரை படகுகள் மூலம் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.


தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன் படி கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. குறிப்பாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காம நாயக்கன்பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் அவினாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் காலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.




இது குறித்து வீட்டில் இருந்தவர்கள் அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி  (12), ஸ்ரீ ஹரி (9) மற்றும் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம், பிரவீன்(8), பிரனிதா(6), தர்ஷீத்(2) ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தினால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண