கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியல் வெளியிடுவது குறித்த கேள்விக்கு, அது அண்ணாமலை வெளியிட்ட பிறகு தான் தெரியும்  என பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவது எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக, நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.


தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது. விருதாச்சலம் பகுதியில் பள்ளி சிறுமிக்கு நடைபெற்ற, பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் தெரியப்படுத்தியப்படுத்தினோம். ஆனால் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்ததும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.  குற்றம் சாட்டப்பட்டவர் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதால், அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதிமுகவினர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் அவர் மீது வேறு வழியில்லாமல் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.


சட்டப்பேரவையில் எனக்கு முன்னால் பேசியதும், எனக்கு பிறகு பேசியதும் உள்ளது. ஆனால் நான் பேசியதை நீக்கி விட்டார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. திமுகவினர் ஜனநாயகத்தை மதித்தால் தான் மக்கள் இவர்களை மதிப்பார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மதித்தால் தானே மற்றவர்களை பற்றி பேச முடியும். இவர்களுக்கு அந்த தகுதி இல்லை. தமிழகத்தில் நாங்கள் தடையில்லா மின்சாரம் கொடுத்து வந்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பும் வழங்கினோம். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும். இவர்களது நிர்வாக திறமை இல்லாத காரணத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


தமிழ்நாடு முழுவதும் ஒருவரே பார்களை எடுத்துக் கொண்டுள்ளார். அது யார் என அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மது விற்பனை நடைபெற்றது. அதனை மீறி செயல்பட்டால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது 24 மணி நேரமும் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது காவலர் புகார் அளித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்படாமல் போராடும் போது, மக்களுக்கு எப்படி காவல்துறையில் நியாயம் கிடைக்கும்? எனவே தமிழகத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண