தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Continues below advertisement

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 7 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தொடரும் கனமழை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 9.3 செ.மீ. மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 7.2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் அருவிகளுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணை நிரம்பக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது எனவே பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் பவானி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola