ஈமு கோழி நிறுவனம் நடத்தி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 2.47 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்திரவிட்டது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2012 ஆம் ஆண்டு சுதி ஈமூ கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த ஈமு கோழி  நிறுவனத்தை தீரன் சின்னமலை பேரவையின் மாநிலத்தலைவர் யுவராஜ் மற்றும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த வாசு, பெருந்துறையை சேர்ந்த தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இரண்டு விதமான திட்டங்கள் இருப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அளித்துள்ளனர்.


அதில் முதல் பண்ணைத் திட்டத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்துக் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு 6 ஈமுக் கோழிகள் கொடுத்து, அதற்கு தேவையான தீவணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பதாகவும், மாதந்தோறும் 7 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்கப்படும் எனவும், வருட முடிவில் ஊக்கத் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.




இரண்டாவது பண்ணைத் திட்டத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் முதலீடு செய்தால் நிறுவனமே 6 ஈமுக் கோழிகளை பராமரித்தும், முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், வருட முடிவில் 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதோடு தலைமறைவாகி விட்டதாக புகார்கள் எழுந்தது.




இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் அள்க்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த  பழனிச்சாமி  என்பவர் கொடுத்த புகாரின் பேரில், யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகிய 3 பேர் மீதும் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து,  3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று கோவை முதலிட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார். அதில் தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், மூன்று பேருக்கும் சேர்ந்து 2.47 கோடி அபராதமும்  விதித்து ரவி தீர்ப்பு வழங்கினார். இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்கு பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.




சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பட்டியலின இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.