கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.  




இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.


இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்தினா கொடுத்த புகாரின் பேரில், மேல் குன்னூர் காவல் துறையினர் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற போது ராணுவ வீரர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு நன்றி கூறி புதிய கம்பளிகளை வழங்கினார்.




இதையடுத்து செய்தியாளர்களுக்கு தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஹெலிகாப்டர் விபத்து குறித்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் தகவல் அளித்தனர். உடனடியாக அனைத்து துறையினரை சம்பவ இடத்திற்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதன்பேரில் 12.25க்கு காவல்துறை, தீயணைப்புத்துறை, தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். 3 பேரை உயிருடன் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பிய மக்களுக்கு நன்றி.மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வந்துள்ளோம்.


ஹெலிகாப்டர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இதுவரை 26 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதிவிரைவுபடை விசாரணை நடைபெறுகிறது. கூடுதல் துணை கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறை விசாரிக்கிறது. விசாரணை தகவல்கள் ராணுவத்துடன் பகிரப்படும். ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை. முப்படை தளபதி வரும் போது, வான்வழியாக சென்றாலும், சாலை மார்க்கத்தையும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. யாரும் சந்தேகத்திற்கிடமாக உள்ளே நுழைய முடியாது. அனைத்து பகுதியிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.