Covai Encounter: கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்டு, 3 பேரும் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

Continues below advertisement

சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்:

கோவையில் ஆண் நண்பருடன் வெளியே சென்று இருந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? காவல்துறை அவர்களை எங்கு? எப்படி மடக்கினர்.. 3 பேரையும் சுட்டு பிடித்தது ஏன்? என பொதுமக்களிடையே எழுந்துள்ள பல கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:

கடந்த ஞாயிறு இரவன்று கோவை விமான நிலையத்திற்கு பின்புறம் பிருந்தா நகர் பகுதியில் காரில் அமர்ந்தபடி, தனது காதலனுடன் இளம்பெண் பேசிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த வழியாக வந்த 3 போதை ஆசாமிகள், காரை மறித்து அரிவாளால் கண்ணாடியை வெட்டி உடைத்து இருவரையும் வெளியே இழுத்துள்ளனர். இளைஞரை தலையில் வெட்டியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். அதன் பிறகு 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மயக்கம் தெளிந்த இளைஞர் காவல்துறைக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட தேடலுக்கு பிறகு படுகாயங்களுடன் பெண்ணை மீட்டுள்ளனர்.

காவல்துறைக்கு உதவிய XL:

இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, சம்பவ இடத்தில் நடந்த ஆய்வில் கேட்பாரற்று கிடந்த ஒரு XL இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. அதன் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், வாகன உரிமையாளரையும், அவரது கூட்டாளிகளுமே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதனை அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

என்கவுன்டர் நடந்தது ஏன்?

இந்நிலையில் தான் சந்தேகிக்கப்படும் நபர்கள் துடியலூர் பகுதியில் வெள்ளக்கிணறு அருகே மறைந்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அங்கு சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான காவல்துறையினர் 3 பேரையும் சுற்றி வளைத்துள்ளனர். தப்ப முயன்ற மூவரை பிடிக்க முயன்றபோது தலைமை காவலர் சந்திரசேகரை இடது கை மணிக்கட்டு பகுதியில் வெட்டியுள்ளனர்.

இதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட தொடங்கிய காவல்துறையினர், 2 பேரை இரண்டு கால்களிலும், ஒருவரை ஒரு காலிலும் சுட்டுப் பிடித்துள்ளனர்.  இதில் காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட தவசி, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.