தினக்கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக 721 ரூபாய் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரில் 3500 தூய்மை பணியாளர்கள் உட்பட 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும், கழிவுகளும் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இன்று இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற அரசின் சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.




இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், “ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியில் சேர்க்க வேண்டும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண